பிரிட்டனின் புதிய பிரதமராக பதவியேற்க ராணி எலிசபெத், போரிஸ் ஜோன்சனுக்கு அழைப்பு விடுத்ததை ஏற்று அவர் பொறுப்பேற்றுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறும் பிரெக்சிட் ஒப்பந்தத்தை இரண்டுமுறை நிறைவேற்ற முடியாத நிலையில் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக தெரேசா மே அறிவித்தார். இதையடுத்து புதிய பிரதமரை தேர்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவரே பிரதமர் பதவியிலும் அமர வைக்கப்படுவார். இது பிரிட்டனை பொறுத்தவரை நடைமுறையில் உள்ள ஒன்றாகும். இதையடுத்து கன்சர்வேட்டிவ் கட்சி தலைமைக்கு 13 பேர் போட்டியிடுவதாக அறிவித்தனர். இது படிப்படியாக குறைந்து 2 பேராக மாறியது. இருப்பினும் போரிஸ் ஜோன்சனுக்கு மிகுந்த ஆதரவு இருந்தது.
தொடர்ந்து கன்சேர்வேட்டிவ் கட்சி தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் முன்னாள் அமைச்சர் போரிஸ்ஜான்சன் அமோக வெற்றி பெற்று பிரதமராக தேர்வானார். இந்நிலையில் பக்கிங்ஹாம் அரண்மனையில் ராணி இரண்டாம் எலிசபெத்தை சந்தித்து, தெரசா மே முறைப்படி தன் ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
இதையடுத்து பிரதமராக பதவியேற்க ராணி எலிசபெத், போரிஸ் ஜான்சனுக்கு அழைப்பு விடுத்ததை ஏற்று புதிய பிரதமராக அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற புதிய பிரக்சிட் ஒப்பந்தம் சிறப்பான முறையில் அக்டோபர் 31ம் திகதி மேற்கொள்ளப்படும் என்று போரிஸ் ஜோன்சன் உறுதி அளித்துள்ளார். இவருக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து இரு நாட்டு நல்லுறவை வலுப்படுத்த இணைந்து பணியாற்ற விரும்புவதாக தெரிவித்துள்ளார்.